இந்தியக் கல்வித் திட்டத்தின் மீது யுனெஸ்கோ கடும் விமர்சனம்


இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் கல்வித்திட்டம் பற்றிய கூர்மையான விமர்சனத்தை யுனெஸ்கோ முன்வைத்துள்ளது.

யுனெஸ்கோ தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியக் கல்வித் திட்டம் நடைமுறையிலிருந்து மாறுபட்டதாகவும், குழந்தைகளுக்கு சவாலானதாகவும் இருக்கிறது. வியட்நாம் நாட்டின் கல்வித் திட்டம், அடிப்படைத் திறன்களில் கவனம் செலுத்துவதாகவும், குழந்தைகளால் எளிதாக கற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் நிலைமை அதற்கு எதிராக இருக்கிறது.

ஆரம்பக் கல்வியை மேற்கொள்ளும் குழந்தைகள், அடிப்படை கணிதம் மற்றும் கல்வியறிவைப் பெறுவது முக்கியம். இதன்மூலம், பின்வரும் நிலைகளில் தங்களுக்கு கற்பிக்கப்படுவதை, அந்தக் குழந்தைகளால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

உலகிலேயே, வயதுவந்த கல்வியறிவுப் பெறாத நபர்கள், இந்தியாவில்தான் அதிகமாக உள்ளனர். குறைந்தபட்சம் 4 ஆண்டுகளை, பள்ளியில் செலவழித்து வெளிவருபவர்களில் 90% பேர் கல்வியறிவற்றவர்களாகவும், குறைந்தபட்சம் 5 முதல் 6 ஆண்டுகளை பள்ளியில் செலவழித்து வெளிவருபவர்களில் 30% பேர் கல்வியறிவற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த சூழலில், பெண் குழந்தைகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானில், மிகவும் எளிமையான கணித அறிவுக்கூட இல்லாமல், ஏழை மாணவிகள் இருக்கிறார்கள். உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில், ஐந்தில் ஒரு ஏழை மாணவிக்கு மட்டுமே, அடிப்படை கணித அறிவு இருக்கிறது.

கேரளா போன்ற மாநிலத்தில், ஒரு மாணவருக்கு, கல்விக்கு செலவழிக்கப்படும் தொகை ரூ.42,470 என்ற அளவிற்கு உள்ளது. ஆனால், பீகார் போன்ற மாநிலங்களில் அந்த தொகை வெறும் ரூ.6,200 மட்டுமே. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Thanks to Dinamalar